சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 20 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருகோணமலை, பவுல்முனைக்கு அப்பாற்பட்ட கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 டிசம்பர் 05) அதிகாலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் இருபது (20) பேரை ஏற்றிச் சென்ற உள்ளூர் பலநாள் மீன்பிடிக் கப்பலொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படையினர் நாட்டின் கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட நான்காவது விரைவு தாக்குதல் ரோந்து படகுகள் படையணிக்கு சொந்தமான P474 விரைவு தாக்குதல் படகின் கடற்படையினர் இன்று (2022 டிசம்பர் 05) அதிகாலை திருகோணமலை ஃபவுல் முனைக்கு அப்பால் கிழக்கு கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த பல நாள் மீன்பிடி படகு ஒன்றை கண்காணித்து ஆய்வு செய்தனர். இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த படகு மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 18 வயதுக்கு மேற்பட்ட 16 ஆண்கள், ஒரு பெண் (01) மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூவர் உட்பட 20 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்த நபர்கள் கழவாஞ்சிகுடி, மட்டக்களப்பு, மூதூர், யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன் அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக வெளியேற முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பொதுமக்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்படும் என எச்சரித்துள்ள கடற்படையினர் அவ்வாறான கடற்பயணங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றனர்.