கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 04 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக முல்லைத்தீவு கோக்கிளாய் களப்பு மற்றும் ஜின்னபுரம் கடற்பகுதியில் 2023 ஜூன் 15 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள், 04 படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் கோட்டாபய மற்றும் ரன்வேலி நிருவனங்களின் கடற்படையினர் இணைந்து நயாறு கடற்படைப் பிரிவின் சிறிய படகுகளை பயன்படுத்தி 2023 ஜூன் 15 ஆம் திகதி மாலை முல்லைத்தீவு கோக்கிளாய் களப்பு மற்றும் ஜின்னபுரம் கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி வலைகள், மீன்பிடி சாதனங்கள் மற்றும் நான்கு (04) டிங்கி படகுகளுடன் நான்கு (04) மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், கடற்படை நடவடிக்கையின் போது வன்முறையில் ஈடுபட்ட ஜின்னபுரம் மீனவர்களை கட்டுப்படுத்த கடற்படையினர் வானத்தை நோக்கி ஒரு எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், சம்பவ இடத்தில் கலவரமாக நடந்து கொண்ட ஒருவரை கடற்படையினர் பிடித்து புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட பெரியபாடு, கோக்கிளாய் மற்றும் புல்மூடை பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேளி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டன.