சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 டிசம்பர் 07) நொரோச்சோலை, சேதபொல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தாறு (1286) கிலோகிராம் பீடி இலைகளை கெப் வண்டியொன்றில் ஏற்றிச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இன்று (2023 டிசம்பர் 07) அதிகாலை, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்பபன்னி நிருவனத்தின் கடற்படையினர் நொரோச்சோலை, சேதபொல பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வண்டியொன்றை சோதனையிட்டனர். அங்கு, 41 பைகளில் கொண்டு செல்ல முயன்ற சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஆயிரத்து இருநூற்று எண்பத்தாறு (1286) கிலோகிராம் பீடி இலைகளுடன் குறித்த கெப் வண்டி (01) மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 28 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆயிரத்து இருநூற்று எண்பத்தாறு (1286) கிலோகிராம் பீடி இலைகள், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் (02) மற்றும் வண்டி (01) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நொரோச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.