இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்களுடன் 04 இந்திய மீன்பிடி படகுகள் வட கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், இன்று (2024 ஜூலை 01) அதிகாலை, யாழ் நெடுந்தீவிற்கு அப்பால் இலங்கை கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலையில், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்று விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர். அங்கு நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு (04) இந்திய மீன்பிடி படகுகளுடன் இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு (04) இந்திய படகுகள் மற்றும் படகுகளில் இருந்த இருபத்தைந்து (25) இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், இந்த நடவடிக்கையுடன், இந்த வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட முப்பத்திரண்டு (32) இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் இருநூற்று முப்பத்தொன்பது (239) இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.