இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் சட்டவிரோதமாக வென்னப்புவ கடற்கரைக்கு வந்த இலங்கையர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து, வென்னப்புவ கரையோரப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் வென்னப்புவ தல் தேக (கடவத்தை) பகுதிக்கு வந்து ரகசியமாக தரையிறங்க முயன்ற இலங்கையர் ஒருவர், 2024 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டார்.

இதன்படி, கடற்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின்படி, சட்டவிரோதமாக இந்திய மீன்பிடிப் படகொன்று மூலம் வென்னப்புவ தல் தேக (கடவத்தை) பகுதிக்கு வந்து ரகசியமாக தரையிறங்க முயன்ற போது வென்னப்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், 2021 ஆண்டில் இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது.

அதன் படி, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மற்றும் இந்திய மீன்பிடிப் படகு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.