Sri Lanka Navy – Official Logo
EVENT NEWS 2026

கடற்படையின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார் நிலையை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆய்வு செய்தார்

19 Aug 2026

பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), ஆகஸ்ட் 18 அன்று பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் (DHQC) அமைந்துள்ள இலங்கை கடற்படைத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு வருகை தந்த பாதுகாப்பு பிரதி அமைச்சரை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ வரவேற்றார். இதன்போது, கடற்படைத் தளபதி மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படையின் தற்போதைய செயற்பாடுகள், முன்னேற்றங்கள் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு விரிவான விளக்கமளித்தனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை கடற்படை வகிக்கும் பங்கு, அத்துடன் கடல் வழியாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை எதிர்கொண்டு முறியடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நவீன தந்திரோபாய மற்றும் மூலோபாய அணுகுமுறைகள் தொடர்பிலும் விரிவான விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கையின் கடல்சார் எல்லை முழுவதும் இலங்கை கடற்படையினால் தொடர்ச்சியாகவும் தடையின்றியும் முன்னெடுக்கப்படும் விரிவான செயற்பாட்டு வலையமைப்பு குறித்தும், உருவாகும் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்கும் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கும் கிடைக்கப்பெறும் வளங்கள் மற்றும் ஆளணியினர் திறம்பட பயன்படுத்தப்படுவது குறித்தும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.

சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதி சார்பில், இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டினார். குறிப்பாக, கடல் வழியாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் மேற்கொள்ளப்படும் வெற்றிகரமான நடவடிக்கைகளையும் நாட்டின் பாதுகாப்பிற்கு வழங்கிவரும் பங்களிப்பையும் அவர் பாராட்டினார்.

கடற்படை பிரதம அதிகாரி மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஊடக ஆதரவு - www.defence.lk

Accessibility Tools