கிழக்கு கடற்படை பிராந்தியத்தின் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் தொழில்முறை அறிவு மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் வேலைத்திட்டம்
இலங்கை கடற்படையின் எதிர்கால தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் நோக்கில், கிழக்கு கடற்படை பிராந்தியத்தில் கடமையாற்றும் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளின் தொழில்முறை அறிவு, செயல்பாட்டு புரிதல் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேலும் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட "செயல்பாட்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் வேலைத்திட்டம்" 2026 ஜூலை மாதம் 04 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
பல தசாப்தங்களாக கடற்படை சேவையில் ஈடுபட்டு பெற்றுக் கொண்ட செயல்பாட்டு அனுபவங்கள், நடைமுறை அறிவு மற்றும் மூலோபாய புரிதல் ஆகியவற்றை எதிர்கால கடற்படை அதிகாரிகளுக்கு கடத்தும் நோக்கில், கொடி அதிகாரி கடற்படை தளக் கட்டளையகத்தின் கொமடோர் தனேஷ் பத்பேரியவின் கருத்தாக்கத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடற்படைத் தலைமையின் எதிர்காலப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்கத் தயாராகிவரும் இளம் அதிகாரிகளின் தொழில்முறை அபிவிருத்தியை வலுப்படுத்தும் தொடர்ச்சியான வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக அமைந்த இவ்வேலைத்திட்டத்திற்காக, மூன்று அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் வளவாளர்களாக கலந்துகொண்டனர். அதற்கமைய, கிழக்கு கடற்படைக் கட்டளையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, தெற்கு கடற்படைக் கட்டளையகத்தின் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன மற்றும் கடற்படை உள் தணிக்கைப் பணிப்பாளர் கொமடோர் ரொஷான் அதுகோரால ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது, மனிதாபிமான நடவடிக்கைகளின் போது அவர்களால் நேரடியாக அனுபவிக்கப்பட்ட செயல்பாட்டு அனுபவங்களின் அடிப்படையில், சவாலான செயல்பாட்டுச் சூழல்களில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துதல், தைரியம் மற்றும் உறுதியைத் தக்கவைத்தல், சரியான தீர்மானங்களை எடுத்தல், சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்தல் மற்றும் தொழில்முறைத் தன்மையைப் பாதுகாத்தல் ஆகியன குறித்த பெறுமதிமிக்க அனுபவங்கள், கலந்துகொண்ட அதிகாரிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகளின் செயல்பாட்டு அனுபவங்கள் மற்றும் தொழில்முறை அறிவை எதிர்காலத்தில் கடற்படைத் தலைமையின் பொறுப்புக்களைப் பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்குக் கடத்த முடிந்ததுடன், இதன் ஊடாக எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் சவாலான செயல்பாட்டுத் தருணங்களில் சரியான தீர்மானம், காலோசித மற்றும் பொறுப்புமிக்க முடிவுகளை எடுக்கும் திறன், மாறும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் தன்மை மற்றும் உயர் சேவை அர்ப்பணிப்பு ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கும் பெரும் பங்களிப்பு வழங்கப்பட்டது.