கடற்படையினரால் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதிகள் பாதுகாப்பு (ISPS) பயிற்சி காங்கேசன்துறை துறைமுகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கை கடற்படையானது 2026 ஜூன் 09 ஆம் திகதி காங்கேசன்துறை துறைமுக வளாகத்தில் சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த பயிற்சியின் போது, துறைமுக வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நபர்கள் நுழைவதைத் தடுத்தல், தீ விபத்துகளைக் கட்டுப்படுத்துதல், இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) அச்சுறுத்தல்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்குத் துரிதமாகப் பதிலளித்தல் தொடர்பான கோட்பாட்டு விரிவுரைகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், வடக்கு கட்டளையின் தீ அணைக்கும் பிரிவு, இரசாயனவியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணு பிரிவு (CBRN), கடற்படை நாய் படை மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை நடத்திய இந்த பயிற்சியில், இலங்கை பொலிஸ், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், சுங்கம் மற்றும் துறைமுக ஆணையம் ஆகியவை பிரதிநிதித்துவம் செய்யும் குழுவினர்கள் கலந்துக்கொண்டனர்.